Wednesday, September 2, 2009

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி ஆனார் லத்திகா சரண்

சென்னை : கூடுதல் டிஜிபியாக செயல்பட்டு வந்த லத்திகா சரண் பயிற்சி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில்,

மாநில நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி லத்திகா சரணுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்றுள்ளார்.

அதேபோல் மாநில தலைமையக கூடுதல் டிஜிபி போலோநாத்தும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த டிஜிபி என்.பாலச்சந்திரன் தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி வாரிய தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

மாநில குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.சேகர் மாநில நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இடம் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டல ஐஜி ஆர்சி குடவாலா மாநில குற்றப்பிரிவு விசேஷ புலனாய்வு பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். மாநில நிர்வாக பிரிவு ஐஜி ஆசிஷ் பெங்ரா வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு ஏற்பார்.


5 உதவி சூப்பிரண்ட்கள் மாற்றம்...

உதவி போலீஸ் சூப்பிரண்ட் சரவணன், அறந்தாங்கிக்கும், சேவியர் தனராஜ், செங்கல்பட்டு சப் டிவிசனுக்கும், அனில்குமார் கிரி, தூத்துக்குடிக்கும், பிரவேஷ்குமார், பரமக்குடி சப் டிவிசனுக்கும், காளிராஜ் மகேஷ்குமார், தஞ்சாவூர் சப் டிவிசனுக்கும் உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினருக்குப் பயிற்சி: குழப்பத்தில் இந்தியா

வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்கான படைப் பயிற்சி நிலையங்களை அமைக்கப்போவதாக சிறிலங்கா தரைப் படைத் தளபதி ஜகத் ஜயசூரிய அறிவித்திருப்பதையடுத்து இந்தியத் தரப்பு குழப்படைந்திருப்பதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள ஆசிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஆதிக்கப் போட்டியை எவ்வாறு திறமையாகவும் தந்திரோபயமாகவும் பயன்படுத்தி அதனைத் தமக்கு சாதகமாகக்கிக்கொள்வது என மகிந்த ராஜபக்ச அரசு திட்டமிட்டு காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'டெயிலி மிரர்' ஆங்கில நாளேடு விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதில் முக்கியமான பகுதிகளை இங்கு தருகின்றோம்:
"இந்தியாவின் தென் கரையோரப் பகுதிக்கு அண்மித்ததாக எதிரி நாட்டு படையினர் முகாமிடுவது தமது பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என இந்தியப் ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருப்பதையடுத்தே இந்த விடயத்தையிட்டு இந்தியத் தரப்பு விழிப்படைந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தென்பகுதியில் அணுசக்தி நிலையங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா சிறிலங்காவுக்கு முழுமையான ஆதரவை வழங்கியமைக்குப் பிரதான காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளிடம் இருந்த வான் படைதான் எனவும் இந்திய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

விடுதலைப் புலிகள் தமது வான் படையை தொடங்கியபோது இந்தியா அதிர்ச்சியடைந்தது. இது தென்னிந்தியாவில் உள்ள தமது படை முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என இந்தியா கருதியமையே இதற்குக் காரணம்.
வான் புலிகள் தமது செயற்பாடுகளை தொடங்கிய உடனடியாகவே அவற்றின் பறப்பைக் கண்டறிவதற்கான கதூவீகளை இந்தியா வழங்கியது. அத்துடன், தென்னிந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் கதூவீகளை இந்தியா பொருத்திக்கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிக்க வேண்டும் என இந்தியா கருதியது. அதனால்தான் இதனைச் செய்வதற்கான உதவிகளை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கியது.
வலிந்த தாக்குதல்களுக்கு உரிய ஆயுதங்களைத் தாம் சிறிலங்காவுக்கு வழங்கவில்லை என இந்தியா தெரிவித்திருந்தாலும் கூட, அவ்வாறான ஆயுதங்களைக் கூட இந்தியா வழங்கியது என்பது இப்போது வெளிப்படையாகி இருக்கின்றது.

இந்தியா ஆயுதங்களை வழங்கிய அதேவேளையில், சீனா, பாகிஸ்தான் ஆகியன ஆயுதங்களை வழங்குவதற்கு தடையாகவும் இருக்கவில்லை. தமக்கு எதிராக உருவாகக்கூடிய ஒரு அமைப்பை அழிப்பதற்கு இந்த நாடுகள் உதவுகின்றன என்ற அடிப்படையிலேயே இந்தியா இதனைப் பார்த்தது.
ஆனால், உள்நோக்கம் எதுவும் இல்லாமல் சீனாவும், பாகிஸ்தானும் சிறிலங்காவுக்கு உதவவில்லை. போர் முடிவடைந்திருக்கும் நிலையில் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுதல் என்ற போர்வையில் பெருமளவு இந்தியப் படையினர் தற்போது வடபகுதியில் இறக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதனால், வடபகுதியில் முகாம்களை அமைப்பதற்கு உதவுவதற்கு சீனா முன்வந்திருக்கும் அதேவேளையில், தமது படையினருக்கு வடபகுதியில் பயிற்சியளிக்க வேண்டும் என பாகிஸ்தான் சிறிலங்காவைக் கோரி இருக்கின்றது.
பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கை சிறிலங்காவினால் நிராகரித்துவிடக்கூடிய ஒன்றல்ல. தற்போதைய அரசின் காலத்தில் மட்டுமன்றி முன்னைய ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் இருந்தே சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் படைத்துறை ரீதியாகப் பெருமளவுக்கு உதவி வந்திருக்கின்றது.

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு உதவிய காலத்தில் கூட பாகிஸ்தான் போரை முன்னெடுப்பதற்காக சிறிலங்காவுக்கே உதவி வந்திருக்கின்றது.
பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கையால் இந்தியாவே பெரும் அதிர்ச்சியடைந்து இருப்பதாகத் தெரிகின்றது. சீனாவும், பாகிஸ்தானும் சிறிலங்காவுக்கு உதவியது விடுதலைப் புலிகளால் உருவாகிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காகவே எனக் கருதிய இந்தியாவைப் பொறுத்தவரையில், பாகிஸ்தான் வடபகுதியில் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக வருவது ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது.
இந்திய ஆய்வாளர்கள் சிலரின் கருத்துப்படி தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைகள், விடுதலைப் புலிகளால் இந்தியா எதிர்கொண்டிருக்கக்கூடிய அச்சுறுத்தலைவிட மிகவும் பாரியது. போர் முடிவுக்கு வந்தபின்னர் சீனாவையும், பாகிஸ்தானையும் பயன்படுத்தி சிறிலங்காவால் தம்மை அச்சுறுத்த முடியாது என்றே இந்தியா கணக்குப் போட்டிருந்தது.

அத்துடன், சிறிலங்காவில் இந்த நாடுகளின் செல்வாக்கும் தேய்ந்து போய்விடும் என்றே இந்தியா கருதியது.
தற்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கும் போது இந்தியாவின் இந்த நம்பிக்கை யதார்த்தமாவதற்கு பாகிஸ்தானும், சீனாவும் அனுமதிக்கும் போல தெரியவில்லை. இந்த நிலைமை சிறிலங்காவுக்குச் சாதகமாகவே உள்ளது. இந்த ஆசிய ஆதிக்கப் போட்டியை மகிந்த ராஜபக்ச அரசு திறமையாகவும், தந்திரோபயமாகவும் பயன்படுத்தி முழுமையாக தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :புதினம்